நடிகர் சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ திரைப்படம் பற்றி வெற்றிமாறன் முடிவெடுக்காமல் திணறி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
’வாடிவாசல்’ திரைப்படம் ஆரம்பிக்குமா அல்லது கைவிடப்பட்டதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இருந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “படம் நிச்சயம் ஆரம்பிக்கும்” என முன்பு ஒரு விழாவில் வெற்றிமாறன் கூறினார். ‘வாடிவாசல்’ படம் ஆரம்பித்தாலும் அதில் சூர்யா நடிக்க மாட்டார் எனவும் இன்னொரு செய்தி பரவியது.
இப்படியான சூழலில்தான் இந்தப் படம் குறித்து வெற்றிமாறன் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்குக் காரணம், இயக்குநர் அமீர் சமீபத்தில் கொடுத்த பேட்டிதான்.
அமீர் நடிப்பில் ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வந்தார். அதில் தான் அவரிடம் ‘வாடிவாசல்’ படம் நடக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில், இந்தப் படத்தில் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதற்கு அவர், “இந்தப் படம் குறித்து வெற்றிமாறனிடம் நானாக சென்று ஒன்றும் கேட்டது இல்லை. ஆனால், அவரே அவ்வப்போது எதாவது சொல்வார். ’சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்’ என்பார். பின்பு, ‘லேட்டாக செய்வோம்’ என்று சொல்வார்.
திடீரென்று ஒருநாள், ‘ ’வாடிவாசல்’ படம் இப்போதைக்கு பண்ணவில்லை’ என்று சொல்வார். சமீபத்தில் அவரை சந்தித்தபோது, ‘மீண்டும் ‘வாடிவாசல்’ ஆரம்பிக்கிறோம்’ என்றார். அவர் எது சொன்னாலும் நான் அமைதியாக கேட்டுக் கொள்வேன்” என்றார். வெற்றிமாறன் இந்தப் படம் குறித்து இப்படி மாறி மாறி பேசியிருப்பது தான் ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.