மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்புப் பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். மேலும் அவர் படக்குழுவினரை தனது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தது. குணா குகையில் சிக்கிய தங்களது நண்பனை உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய நண்பர்களது நெகிழ்ச்சி கதைதான் இந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. கிளைமாக்ஸில் இறுதியாக ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடல் ஒலிக்க விட்டிருந்ததும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் படத்தின் வெற்றிக்குப் பெரிய பலமாக அமைந்தது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அழைத்துப் பாராட்டியது பற்றி படக்குழுவினர் பகிர்ந்து கொண்டபோது, “எங்கள் படம் ரூ. 200 கோடி வசூல் பெற்றது என்பதை விட ரஜினி சார் அழைத்துப் பாராட்டியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக நடிகர்கள் விக்ரம், சிம்பு, தனுஷ் என கோலிவுட்டின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தப் படம் கொடுத்த புகழால் இயக்குநர் சிதம்பரத்திற்குத் தமிழிலும் நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். விரைவில் அதற்கான அறிவிப்பும் வரும் என்கிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...