டைட்டானிக் திரைப்படத்தில், கதைப்படி நாயகி ரோஸ் உயிர் பிழைக்க உதவிய மரக்கதவு ஒன்று ரூ5.8 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
டைட்டானிக் கப்பலையும் அதையொட்டிய துயரத்தையும், அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக்(1997) திரைப்படம், அந்த கப்பல் குறித்தான பிரமிப்புகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
உலகின் மிகப்பெரும் கப்பல் என்ற பறைசாற்றலுடன் கடல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் கப்பல், 1912 ஏப்ரல் 15 அன்று பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் சுமார் 1500 உயிர்கள் பலியாயின. இந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சுவாரசியத்துக்கான புனைவுகள் கலந்து உருவான டைட்டானிக் திரைப்படம் ரசிகர்களை உருக வைத்தது. குறிப்பாக திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், நாயகி ரோஸ் கடலலையில் மிதக்கும் கதவு ஒன்றின் மூலமாக உயிர் தப்புவார். அவர் மூலமாகவே டைட்டானிக் கப்பல் குறித்த கதை பின்னர் பார்வையாளர்களுக்கு சொல்லப்படும்.
மேற்படி கதவும் அதையொட்டிய காட்சிகளும், நிஜ சம்பவத்தோடு நெருங்கிய தொடர்புடையவை. தற்போது இந்த கதவு ஏலம் போயுள்ளது. மேலும் அது தொடர்பான விவாதங்களையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கதவின் சிறிய பாகமான அலங்கரிக்கப்பட்ட மரத்துண்டு டல்லாஸில் நடைபெற்ற ஹெரிடேஜ் ஏலத்தில் அமெரிக்க டாலர் மதிப்பில் 7,18,750-க்கு விற்பனையானது. இது இந்திய கரன்சி மதிப்பில் ரூ5.8 கோடியாகும்.
இந்த ஏலத்தை அடுத்து டைட்டானிக் திரைப்படக் காட்சியில் இடம்பெறும் ஜேக் மற்றும் ரோஸ் இருவரையும் குளிர்ந்த நீரில் இந்த மரக்கதவு காப்பாற்றியிருக்க முடியுமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. "பெரும்பாலும் கதவு என்று குறிப்பிடப்பட்டாலும், அந்த மரம் உண்மையில் கதவல்ல. முதல் வகுப்பு நுழைவாயிலுக்கு மேலே கதவு சட்டத்தின் ஒரு பகுதியாகவே அது இருந்தது” என ஏல நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஹெரிடேஜ் ஏலங்களின்படி, இந்த உருப்படி பால்சா மரத்தால் ஆனது என்றும் அலங்கரிக்கப்பட்ட மலர் சித்தரிப்புகள் மற்றும் வளைவுகளைக் கொண்டுள்ளது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.