நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவின் அஸ்தி அனைத்து சடங்குகளுக்குப் பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே உள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ஆகஸ்ட் 7 ம் தேதி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவர் குடும்பத்தினருடன் பாங்காக் சுற்றுலா சென்றிருந்த போது அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவரது எதிர்பாராத மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அவரது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஹரிஷ்சந்திரா காட்டில் ஸ்பந்தனாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கப்பட்டினம் காவிரி ஆற்றங்கரையில் அவரது குடும்பத்தினரால் கரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பூஜை நடந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, திரென குறைந்த இரத்த அழுத்தத்தினால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பந்தனாவின் இறுதிச் சடங்கிற்காக அவரது திருமணப் புடவையை அணிவித்திருந்தனர். அவரது இறுதிச் சடங்கில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர். நடிகர் யாஷ், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விஜய்க்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஸ்பந்தனா ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் பி.கே.சிவராமின் மகள். விஜய் மற்றும் ஸ்பந்தனா 2007 இல் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார், பெயர் சௌர்யா. ஸ்பந்தனா 2016 இல் 'அபூர்வா' என்ற படத்திலும் நடித்தார். அதில் அவர் ரவிச்சந்திரன் மற்றும் விஜய் ராகவேந்திராவுடன் நடித்தார்.