'மஞ்சுமல் பாய்ஸ்' பட இயக்குநரின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கமல்ஹாசன்!


கமல்ஹாசன், சிதம்பரம்

"நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். அவரை நேரில் சந்திக்க வேண்டும். அவருக்கு அர்ப்பணிப்பதற்காகவே இந்த படத்தை எடுத்தோம்" என 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் தெரிவித்து இருந்தார். அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் கமல்ஹாசன்.

மஞ்சும்மல் பாய்ஸ்

சமீபகாலமாக, மலையாள சினிமாக்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதன் இயல்பான கதைக்களங்களும், வித்தியாசமான முயற்சிகளும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதுமே விரும்பி கொண்டாடி வருகின்றனர். 'கண்ணூர் ஸ்காவ்ட்', 'பிரம்மயுகம்' படங்கள் வரிசையில் தற்போது 'மஞ்சும்மல் பாய்ஸ்' படமும் இணைந்துள்ளது.

இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் அதிகம் கொண்டாட இன்னொரு முக்கிய காரணம் 'குணா' படத்தில் இடம்பெற்றுள்ள குகைதான். தமிழகத்தில் பல மல்டிபிளக்ஸ்களில் இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வருடத்தில் முதல் ரூ. 100 கோடி நெருங்கும் திரைப்படம் என இந்த படத்தை ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

17 வருடங்களுக்கு முன்பு, கேரளாவின் மஞ்சுமல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானல் சுற்றுலா செல்கின்றனர். அதில் சுபாஷ் என்ற இளைஞன் கொடைக்கானலின் ஆபத்தான குகைப்பகுதியில் சிக்கிக் கொள்கிறார். அங்கு மாட்டிக் கொண்ட யாருமே உயிர் திரும்பியதில்லை. ஆனால், சுபாஷ் உயிரோடு மாட்டியிருக்க அவரை எப்படி நண்பர்கள் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. அந்தக் குகை 'குணா' படத்தில் வந்ததுதான். இந்தப் படத்தினை இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ளார்.

'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினருடன் கமல்ஹாசன், சந்தானபாரதி.

நடிகர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் இயக்குநர் சிதம்பரம். கமல்ஹாசனை நேரில் சந்திக்கலாம் அவரது கவனத்தை பெறலாம் என்பதற்காகவே 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை எடுக்க முக்கியக் காரணம் எனத் தனது சமீபத்திய பேட்டியில் சிதம்பரம் சொல்லியிருந்தார். அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை கமல்ஹாசன் மற்றும் சந்தானபாரதி சந்தித்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x