"சென்னை, பூவிருந்தவல்லி அருகே ரூ. 500 கோடி ரூபாயில் திரைப்பட நகரம் அமைக்கப்படும்" என்று, இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் அதி நவீன திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், பூவிருந்தவல்லி அருகில் குத்தம்பாக்கத்தில் 140 ஏக்கரில் ரூ. 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்த நவீன திரைப்பட நகரில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 ஸ்டார் ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திரைப்பட நகரம் அமைக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
குத்தம்பாக்கத்தில் சுமார் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்போது திரைப்பட நகரமும் கட்டப்பட உள்ளதால் அந்த பகுதிகள் அதிக அளவில் வளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!