கோவணம் கட்டிக் கொண்டு தேள், பாம்புடன் ‘தங்கலான்’ படத்தில் நடித்தேன் என நடிகர் விக்ரம் டீசர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தியும், அங்கு வேலை செய்தவர்களின் கதைகளைக் கொண்டும் வரலாறாக இந்தப் படம் உருவாகியுள்ளது என இயக்குநர் இரஞ்சித் தெரிவித்திருந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டுள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து பேசியுள்ளார். “வரலாற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாட வேண்டும். கெட்ட விஷயங்களை மறக்க கூடாது. இரஞ்சித் மிக அழகாக கதைக்களத்தை விவரித்தார். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலை யதார்த்தமாக பேசும் படைப்பாக இது இருக்கும்.
’கேஜிஎஃப்’பில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தினோம். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது. தேள், பாம்பு என இரஞ்சித் கேட்ட பத்து நிமிடத்திலேயே எல்லாம் இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபிறகு கோவணத்தை கட்டிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்.
முதன்முறையாக நான் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். இயக்குநர் இரஞ்சித்தும் படப்பிடிப்பில் கோவணத்துடன் தான் இருந்தார். முந்தைய நாள் எப்போடா முடியும் என இருக்கும். அடுத்த நாள் ‘வாங்க ஷூட்டுக்கு போவோம்’ என ஆர்வத்துடன் இருப்பேன். இப்படியான உணர்வை நான் எந்தப் படத்திலும் சந்தித்தது இல்லை. இந்தப் படம் மேக்கிங் அளவில் இரஞ்சித்தின் ‘சார்பட்டா’வை விட நூறு மடங்கு சிறப்பாக இருக்கும். எதிர்பார்ப்பை நிச்சயம் ‘தங்கலான்’ பூர்த்தி செய்யும்” என்றார்.