மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சி... நான்காவது முறையாக ஆம்புலன்ஸ் கொடுத்த பாலா!


ஆம்புலன்ஸ் கொடுத்து உதவிய பாலா

நடிகர் பாலா மக்களுக்கு நான்காவது முறையாக ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியுள்ளார்.

'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா மக்களுக்கு நான்காவது முறையாக இலவச ஆம்புலன்ஸ் வழங்கியிருப்பதுதான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாளுக்கு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் பாலா. பின்பு, ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக இன்னொரு இலவச ஆம்புலன்ஸை வாங்கித் தந்தார் பாலா.

இதனை அடுத்து, மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களை தேர்வு செய்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக நடிகர் பாலா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளக்கனை மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் பாலா 5 லட்சம் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி தந்திருக்கிறார்.

பாலா...

இந்த சோளகனை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா மற்றும் 125 குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா சோளகனை மலை கிராமத்தில் நடந்தது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலா, "மருத்துவ வசதி தேவைப்படும் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து இந்த ஆம்புலன்ஸ் சேவையை செய்வேன். நிறையப் பேர், 'நீ ஏன் வாடகைக் கார்ல போற... சொந்தமா ஒரு கார் வாங்கலாம்ல”ன்னு சொன்னாங்க. நான் சொகுசுக் கார் வாங்கி ரோட்டோரம் போறதுக்கு பதிலா, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து ரோட்டோரம் இருக்கறவங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா அது நான் பென்ஸ் கார்ல போனதுக்குச் சமம்" எனச் சொல்லி இருக்கிறார்.

இவரைப் போல மனித நேயம் கொண்ட பாலாக்கள் இன்னும் நிறையப் பேர் இதுபோல சிந்தித்து செயலுக்கு வரட்டும்!

x