கேரளத்தின் கோழிக்கோட்டில் சினிமா பட புரமோஷனுக்காக சென்ற நடிகைகளுக்கு கூட்ட நெரிசலில் சிலர் பாலியல் தொல்லைக் கொடுத்தனர். அப்போது நடிகை சானியா ஐயப்பன் சீண்டல் செய்த வாலிபரின் கன்னத்தில் பளார் என அறை கொடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளத்தின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மால் ஒன்றில், திரைப்பட புரமோஷன் ஒன்று நடந்தது. இதில் கலந்துகொள்ள நடிகைகள் கிரேஸ் ஆண்டனி, சானியா ஐயப்பன் ஆகியோர் வந்திருந்தனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ரசிகர் ஒருவர் இருவரிடமும் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டார். இதனால் கோபப்பட்ட நடிகை சானியா ஐயப்பன், தனக்குப் பாலியல் சீண்டல் கொடுத்த நபரின் கன்னத்தில் பளார் என அறை கொடுத்தார்.
இதுதொடர்பான வீடியோ காட்சியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நடிகை சானியா ஐயப்பன், “நிகழ்வு முடிந்து நானும் சக நடிகையும் வெளியேறிக் கொண்டிருந்தோம். முதலில் அவள் சீண்டலுக்கு உள்ளானார். அடுத்து நான். உடனே நான் அறைந்துவிட்டேன். பெண்களை வன்கொடுமை செய்யும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கொந்தளித்துள்ளார்.
இதே பதிவை நடிகை கிரேஸ் ஆண்டனியும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பட புரமோஷனுக்காக நாங்கள் பல ஊர்களுக்கும் சென்றோம். ஆனால் கோழிக்கோட்டில் நடந்தது மோசமான அனுபவம். சக நடிகை உடனே ரியாக்ட் செய்துவிட்டார். ஆனால் என்னால் அது இயலவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகைகள் புரமோஷன் பணிக்குச் சென்ற இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.