யோகிபாபு நடிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ள படம், ‘ஜோரா கைய தட்டுங்க’. மாயாஜால வித்தை நிகழ்த்தும் கலைஞனின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது. வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்துள்ள இதில் ஹரிஸ் பெரேடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருணகிரி இசையமைத்துள்ளார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மே 16-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது யோகிபாபு பேசும்போது, “நான் ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ படத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடித்தேன். ரூ.1000 சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன்செய்து அதன் இயக்குநர் பேசியபோது ‘சொல்லுங்கள் விநீஷ் சார்’ என்றதும் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன்.எல்லோருக்கும் ஆதரவு கொடுத்துதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார்.
அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்துக்கு நான் ரூ.7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லி இருக்கிறார். இது நான் நடித்த படம். அதனால் வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் பற்றி மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள்” என்றார். தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, பி.எல்.தேனப்பன், தனஞ்செயன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.