சிவாஜியின் ரசிகர் முதல்வர் ஸ்டாலின்: சிலை திறப்பு விழாவில் நடிகர் பிரபு நெகிழ்ச்சி


திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிவாஜி கணேசனின் மகனும், பிரபல நடிகருமான பிரபு, அவரது மூத்த சகோதரர் ராம்குமார், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலை திறப்பு முடிந்ததும் சிலையில் கீழே இவர்களுடன் நின்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர், பிரபு செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் எங்கள் தந்தை சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கும், அதற்கு காரணமாக இருந்த அமைச்சர் கே.என். நேரு, மேயர் அன்பழகன் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிவாஜியின் சிலையை கலைஞர் திறப்பதாக இருந்தது. அது முடியாமல் போய்விட்டது.

தற்போது சிவாஜிக்காக எப்போதும் குரல் கொடுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது தந்தை மீது அளவு கடந்த அன்பும் அவருடைய தீவிர ரசிகராகவும் இருப்பவர் முதல்வர். அவர் சிவாஜி படங்களை ரசித்து பார்ப்பார். 'பறவைகள் பலவிதம்' போன்ற அவரது பாடல்களை மேடையில் பாடுவார்.

சிறுவயதில் எங்கள் தந்தை திருச்சியில் தான் வளர்ந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும் பொழுது எங்கள் தந்தையுடன் திருச்சியில் எடத்தெரு, பீமநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுவண்டியில் சென்று உள்ளோம். திருச்சிக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு.

இந்த சிலையை அமைத்ததற்கு திருச்சி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றால், அது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேருவால் தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

x