‘இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்' - சிவகார்த்திகேயன் பெருமிதம்; பிரகாஷ் ராஜ் பாராட்டு!


சென்னை: இதுதான் இந்திய ராணுவத்தின் முகம் என ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இதுதான் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய்ஹிந்த்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நமது இந்திய ஆயுதப் படைகளுக்கு வணக்கம்.. இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது. ஜெய் ஹிந்த்’ எனத் தெரிவித்துள்ளார்

x