‘நான் இன்னும் மனதளவில் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் தான்’ - மனம் திறந்த அஜித்!


டெல்லி: நடிகர் அஜித்குமாருக்கு ஏப்ரல் 28-ம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பத்ம பூஷண் விருது வென்றதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள முன்னணி நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் அஜித்.

அந்தப் பேட்டியில் அஜித், “நான் இன்னும் மனதளவில் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் தான். பத்ம பூஷண் விருது பெற்றவுடன் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இது போன்ற விருதுகள் நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள், இத்தனை ஆண்டுகளாக செய்து வந்ததைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சூப்பர் ஸ்டார்’ மற்றும் ‘தல’ ஆகிய பட்டங்கள் குறித்து, “என் பெயருக்கு முன்னால் உள்ள எந்தவொரு பெயரையும் ஏற்பதில்லை. அஜித் அல்லது ஏகே என்று அழைக்கப்படுவதை விரும்புகிறேன். நடிப்பது என்பது ஒரு வேலை. என் வேலைக்கு சம்பளம் வாங்குகிறேன். நாம் செய்யும் வேலையில் இருந்து கிடைத்தது புகழும், செல்வமும். என் வேலை ரொம்பவே பிடிக்கும். கடந்த 33 வருடமாக நான் செய்து வந்தது பிடிக்கும்.

என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். அளவுக்கு அதிகமாக யோசிப்பதை தவிர்க்கிறேன். ஒரே நேரத்தில் அதிக வேலைகளை செய்வதில்லை. எனது மற்ற பொழுது போக்கு, ஆர்வம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார் அஜித்.

x