கருணாநிதி நினைவலைகள் 4: மறக்கமுடியாத அந்த கைது நடவடிக்கை!

2001-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி நள்ளிரவைக் கடந்த நேரத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்ட அந்த நிமிடம் அவரது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களுள் ஒன்றாகும்.
மேம்பால ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காவல்துறை கைது செய்த சம்பவம் திமுக அரசியல் தொண்டர்களால் இன்றளவும் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
எந்த ஒரு கட்சி தொண்டர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் கைது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கக்கூடியதுதான். ஆனால், அன்றைய தினம் கருணாநிதியை உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் கைது செய்த அந்த நடவடிக்கை இன்றளவும் அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் சோக நிகழ்வாக இருக்கிறது.
அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த முத்துக்கருப்பன் தலைமையிலான காவல்படை கருணாநிதியின் வீட்டில் நுழைந்து கருணாநிதியை கைது செய்தது.
அந்த நேரத்தில் போலீஸாரை சற்றும் எதிர்பாராத கருணாநிதி முரசொலி மாறனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். ஆனாலும், இரவு உடையில் இருந்த கருணாநிதியை வேறு உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் கைது செய்தது காவல்துறை.
அணிந்திருந்த லுங்கியுடனே கைது செய்யப்பட்ட கருணாநிதியை போலீஸார் எங்கு அழைத்து செல்கின்றனர் என்பதும் தெரியாமல் இருந்தது. பின்னர் ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதையறிந்து கனிமாழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அங்கிருந்து அவசரமாக வேப்பேரி அழைத்து செல்லப்பட்டார் கருணாநிதி.
ஒரு நாடகம் போல் கட்டமைக்கப்பட்ட அந்த கைது நிகழ்வு திமுகவினர் மத்தியில் இன்றும் ஒரு கசப்புணர்வாகவே இருக்கிறது.
ஒருவழியாக மாஜிஸ்திரேத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாநிதியை ஜூலை 10ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. சிறையில் அடைப்பதற்காக கருணாநிதி அழைத்து செல்லப்பட்ட போது சிறை வாசலிலேயே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவர் "ஐயோ கொல்றாங்களே.. ஐயோ கொல்றாங்களே" என்று கூக்குரலிட்டது தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.
கருணாநிதி கைது நடவடிக்கை ஜெயலலிதா மீது பூமராங் போல் திரும்பியது. ஜெயலலிதா அதிகார மமதையில் இருப்பதாக விமர்சனங்களைக் குவித்தது.