'பாலா... அன்பின் வடிவம்!’ - சாருநிவேதிதா

சாருநிவேதிதா
எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன்.
உனக்கென்ன கோவில் குளம்
சாமி பூதம் ஆயிரமாயிரம்
இனிமையாய்ப் பொழுதும் போகும்
வலப்பக்கம் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள்
வலிக்கின்றன
அடியே
நாளையேனும் மறக்காமல்
வா
என்று ஒரு கவிதை கணையாழியில் வந்திருந்தது. பாலகுமாரன். உடனே அவரைச் சந்தித்துவிட வேண்டும் என்று கடிதம் எழுதினேன். லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. உடனே பதில் வந்தது நிவேதிதா என்ற பெண்ணுக்கு. போனேன். அடப்பாவி, இப்படி ஜெயகாந்தன் மாதிரி வந்து நிற்கிறீரே. ஆமாம் அப்போது ஜெயகாந்தன் மாதிரி கட்டுமஸ்தாகவும், அவரைப் போலவே சிகையலங்காரமும் கொண்டிருந்தேன்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அழகிய இளம்பெண் வந்து பாலாவிடம் கொஞ்சம் கொஞ்சிவிட்டு போனது. ம்… பொறாமையாக இருந்தது. என்ன செய்தாவது எழுத்தளானாகிவிடுவது என்று முடிவு செய்த தருணம் அது. மேன்ஷனுக்கு திரும்பிய கையோடு ஒரு சிறுகதை எழுதி சாவிக்கு அனுப்பினேன். அடுத்த வாரமே பிரசுரித்தார் சாவி. அதுக்கு அடுத்த வாரம் தில்லி போய்விட்டேன். அப்புறம் என்ன, பெர்க்மன், அந்தோனியோனி, ஃபெலினி, காஃப்கா, ஜான் ஜெனே, ஆஸ்கார் ஒயில்ட். அதோடு மெட்ராஸ் என் நினைவில் இருந்து மறந்து போயிற்று. இப்போது கடந்த பத்து இருபது ஆண்டுகளாக திரும்பவும் மெட்ராஸ், திரும்பவும் பாலா. இப்போதைய பாலா ஒரு சித்தபுருஷராக உயர்ந்திருந்தார்.
மனிதனுக்கும் விலங்குக்கும் இடைப்பட்ட நிலையில் பல மனிதர்களைப் பார்க்கிறோம். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களே ஞானிகள், சித்தர்கள். பாலா அப்படிப்பட்ட சித்த புருஷராக உயர்ந்திருக்கிறார். அவரைப்பற்றி எத்தனையோ கதைகளை, சம்பவங்களை நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்னைத் தொட்டார். துலக்கியது வாழ்க்கை. ஒரே கணம் பார்த்தார். வேறு மனிதனானேன். இப்படி, இப்படி.
மேலே, மனிதனுக்கும் விலங்கிற்கும் இடைப்பட்ட ஜீவிகளைப் பற்றி சொன்னேன் இல்லையா, அந்தப் பிரிவில் உள்ள பலரும் மெத்தப் படித்தவர்களாகவே இருப்பதையே காண்கிறேன். ஆச்சரியம் கொள்ளத்தக்க விஷயம் அது. படிப்பு மனிதனை மேன்மை கொள்ளச் செய்யாதா? சமீபத்தில்கூட ஒரு மெத்தப் படித்தவர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வைத்து என்னிடம் நீங்கள் தேவனைப் படித்திருக்கிறீர்களா என்றார். இடம் வலமாக தலையாட்டினேன். அப்படியானால், உங்களை எழுத்தாளர் என்றே சொல்லிக்கொள்ளாதீர் என்றார். படித்தவர்கள் மட்டுமே இப்படி இருப்பதைப் பார்க்கிறேன். படிக்காத ஆள் ஒருவர்கூட இப்படி நடந்துகொண்டதில்லை, இதுவரை. யோசித்தேன். ஒரே காரணம்தான். படிப்பு அதன்கூடவே அகந்தையையும் கொண்டுவந்துவிடுகிறது. படிப்பினால் ஏற்படும் மேன்மையை அந்த அகந்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.
சமீபத்தில் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் லட்சக்கணக்கான பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார். “பிச்சைக்காரனாக இந்தியா பூராவும் சுற்றினேன். திருவண்ணாமலைக்கு வந்தேன். பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன். யோகி ராம்சுரத்குமார். பின்னாளில் அவர் ஞானியானார். நான் எழுத்தாளனானேன்.” அதிர்ந்து போனேன். காரணம் அந்த எழுத்தாளனின் வயது 50. அகந்தைதான் இப்படியெல்லாம் பேசவைக்கிறது.
பாலாவின் கண்களைப் பார்க்குந்தோறும் ஒரு யோகியைப் பார்ப்பது போல் இருக்கிறது. தாடியினால் அல்ல; அந்த கண்கள். கைகளைத் தொட்டேன். உடனே உள்ளே அதிர்ந்தது. இப்படிப்பட்டவர்களின் பாதம் தொட்டு வணங்குவது என் வழக்கம். அனுமதி கேட்டேன். “அது கூடாது சாரு. நீ எனக்கு சமமானவன்,” என்றார் பாலா. அதுதான் பாலா. அவன் அடைந்திருக்கும் இடம் எங்கே? நான் எங்கே? இந்த அடக்கம்தான் பாலா.
சினிமாவில் பாலா விட்ட இடத்தை இன்னும் நிரப்ப ஆள் இல்லை. (நீங்கள் நல்லவரா? கெட்டவரா?)
பரவாயில்லை. சினிமாவினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பாலா என்ற ஒரு சித்த புருஷன்… இப்படி ஒரு மனிதனை நான் கண்டதில்லை.
பாலா, மூத்தவனே, உன் தாள் பணிந்து வணங்குகிறேன்!
- இந்தக் கட்டுரை ’எழுத்துக்கு எழுபது’ எனும் எழுத்துச்சித்தரின் நூலில் சாருநிவேதிதா எழுதியது.
........
இப்போது, தன்னுடைய ப்ளாக்கில் பாலகுமாரன் குறித்து சாருநிவேதிதா எழுதியது இதோ...
பாலகுமாரனுக்கும் எனக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிக நெருங்கிய நட்பு இருந்தது. பல முறை அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். நானும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். என் எழுத்தைப் பற்றி பிரமித்து பிரமித்துப் பேசுவார். நீ வா போ தான்.
நான் அவரிடம் சொல்வேன், பாலா என் 25-ஆவது வயதில் வெளியான ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் என்ற தொகுப்பில் வந்த உங்கள் கதை ஒன்றைத் தவிர உங்களுடைய வேறு ஒரு கதையோ நாவலோ நான் படித்ததில்லை என்று. அதைப் பற்றியெல்லாம் புகார் செய்ய மாட்டார். உடையாரைப் படி என்பார். எடுத்துக் கொடுப்பார். அடுத்த முறை பார்க்கும் போது உடையார் படித்தாயா என்று ஆர்வத்தோடு கேட்பார். இல்லை பாலா என்பேன் சிரித்துக் கொண்டே. உடனே விட்டுவிடுவார்.
ஆனால் கணையாழியில் அவருடைய 25 வயதில் எழுதிய ரொமாண்டிக் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்வேன். சிறுபிள்ளை மாதிரி குதிப்பார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நார்ட்டன் ரோட்டில் வசித்த போது என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் அவர் சகோதரியின் வீடு இருந்தது. தினந்தோறும் ஸ்கூட்டரில் அங்கே வருவார். பார்ப்பேன். பிறகு நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் என்ற பெயரில் ஏதோ ஒன்றைச் செய்வார். உணவுக் கட்டுப்பாடு அறவே கிடையாது.
சின்ன வயதிலேயே அசோகமித்திரன், ஆதவன், இ.பா., கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா. (லா.ச.ரா. வெறியன் அப்போது), கு.ப.ரா. என்று நான் ரொம்பவே கெட்டுப் போயிருந்ததால் பாலாவின் எழுத்தோடு எனக்குத் தொடர்பு இல்லை. முதலில் ஜெ.கே. அடுத்து சுஜாதா. அதோடு நேராக அ.மி., எம்.வி.வி. என்று போய் விட்டேன்.
ஆனாலும் பாலாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எழுத்தைத் தாண்டி பல காரணங்கள். ஒன்று. சினிமா. பாட்ஷா, நாயகன் போன்ற பல படங்களுக்கு அவர் வசன கர்த்தா. அதை விட புதுப்பேட்டைக்கு அவர் தான் வசனம். அந்த இடத்தை நிரப்ப ஆளே இல்லை. சினிமா வசனத்துக்கு ஒரு உயர்தர ஸ்தானத்தைக் கொடுத்தார் அவர்.
- பெண்களை அவரும் அவரைப் பெண்களும் நேசித்தது. பெண்களை அவர் அளவுக்கு மரியாதை செலுத்திய ஒரு மனிதரை நான் கண்டதில்லை. துளிக்கூட possessiveness இருக்காது அவரிடம்.
- அவர் அளவுக்கு அடக்கமான அன்பான மனிதரை நாம் பார்ப்பது அரிது. அன்பின் மொத்த வடிவம். இரவு பத்து மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டி, தான் எழுதிய புதிய புத்தகத்தைக் கொடுத்து விட்டுப் போவார். அடுத்த சந்திப்பில் படித்தாயா என்ற கேள்வி வரும். வழக்கமான பதில் தான். இல்லை. கவலையே பட மாட்டார். மீண்டும் ஒருநாள் இரவு பத்து மணிக்கு இன்னொரு புதிய புத்தகம்.
கடைசியில் சென்ற ஆண்டு அவருடைய ஒரு புத்தகத்தைப் படித்து பிரமித்தேன். ஆன்மீக நூல். 'இது போதும்'. யோகியின் சாரம்.
பல சித்து வேலைகள் செய்திருக்கிறார். அதைப் பற்றிச் சொல்ல மாட்டேன். போலிகள் உலவும் பூமி. நேரில் சொல்கிறேன். இவ்வளவு அன்பான மனிதனும் உண்டா என்று நினைக்கும் போது பொங்கிப் பொங்கி அழ நேர்கிறது.
சென்ற மாதம் பூராவும் நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். பாலா, இப்படிச் சொல்லாமல் போய் விட்டாயே? இரவு பத்து மணிக்கு வந்து வீட்டுக் கதவைத் தட்டி தன்னைப் படிக்கவே படிக்காத ஒருத்தனிடம் புத்தகம் கொடுக்க இனி யார் இருக்கிறார்கள்?
பாலகுமாரன் தொடர்பு கொண்ட பதிவுகளைப் படிக்க...