மெஹந்தியால் மனோபாலா மகன் திருமணப் பதிவில் ஏற்பட்ட சிக்கல்

மணப்பெண் கையில் மெஹந்தி வைத்ததால், மனோபாலா மகன் திருமணப் பதிவில் சிக்கல் ஏற்பட்டது.
நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் மனோபாலா. இவருடைய மகன் ஹரிஷுக்கும் பிரியாவுக்கும், சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 11) காலை திருமணம் நடைபெற்றது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இயக்குநர்கள் ஹரி, ஷங்கர், எஸ்.பி.முத்துராமன், ஆர்.கண்ணன், மோகன் ராஜா நடிகர்கள் நாசர், பிரசன்னா, பரத், உதயநிதி ஸ்டாலின், அதர்வா, விஷால், ஜீவா, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்குப் பின் அதனைப் பதிவுசெய்யச் சென்றபோது, மணப்பெண் பிரியா கையில் மெஹந்தி வைத்திருந்ததால், அவருடைய ரேகை மெஷினில் பதிவாகவில்லை. சிலமுறை முயற்சித்தும் பதிவாகததால், பின்னர் கட்டைவிரலில் உள்ள மெஹந்தியை ஓரளவு நீக்கிய பின்னரே மெஷின் ரேகையை ஏற்றுக் கொண்டது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மனோபாலா, ‘கட்டை விரல் தவிர மற்ற இடங்களில் மெஹந்தி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, வெளிநாடு செல்பவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை..கட்டைவிரலில் வைத்தால் மேரேஜ் ரிஜிஸ்டரேஷன் கஷ்டமாகிவிடும்..மெஷின் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறது..be careful ..கட்டைவிரல் தவிர மெஹந்தி வைத்து கொள்ளுங்கள்.. முக்கியமாக வ
வெளிநாடு செல்பவர்கள்.. pic.twitter.com/Rd1STUyd4g— manobala (@manobalam) February 11, 2019